ஐபிஎல்: காயத்தால் விலகினார் மார்க் வுட்

லண்டன்: ஐபிஎல் டி20 தொடரில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக களமிறங்க இருந்த இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட், முழங்கை காயம் காரணமாக விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றிருந்த மார்க் வுட், கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்டின்போது வலது முழங்கையில் காயம் அடைந்தார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து வுட் காயம் காரணமாக விலகியுள்ளார். அவர் உடனடியாக நாடு திரும்பி சிகிச்சை பெறுவதுடன் கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.இதனால், ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக வுட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த மெகா ஏலத்தில் லக்னோ அணி அவரை ₹7.5 கோடிக்கு வாங்கி இருந்தது.

Related Stories: