சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புது அச்சுறுத்தல்; பூமியில் போடுற சண்டை போதாது என்றால்... அங்கேயுமா?.. ரஷ்ய ஆய்வு நிறுவன தலைவரின் எச்சரிக்கையால் அச்சம்

மாஸ்கோ: உக்ரைன் போர் விவகாரம் தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் வரை சென்றுள்ளதால், சர்வதேச நாடுகள் அச்சமடைந்துள்ளன. ரஷ்ய ஆய்வு நிறுவனரின் கடிதத்தால் அமெரிக்கா போன்ற நாடுகள் கவலையடைந்துள்ளன. சர்வதேச விண்வெளி நிலையமானது 14 நாடுகளால் ஒன்றிணைந்து  கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையத்தின் ஒரு பகுதியை ரஷ்யா கட்டமைத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளின் விண்வெளி ஏஜென்சிகள் இயக்கி வருகின்றன.

ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டை சார்ந்தே உள்ளன. நாசா  தலைமையிலான பகுதிக்கு ரஷ்யா தான் மின்சாரத்தை வழங்குகிறது; மேலும் அமெரிக்க  விண்வெளி சுற்றுப்பாதையை ரஷ்யாதான் கட்டுப்படுத்தி வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தை  பொருத்தமட்டில் அங்கு மிகப்பெரிய ஆய்வகம் உள்ளது. இதில், விண்வெளி வீரர்கள்  உள்ளனர். அவர்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் வரை தங்கியிருந்து ஆய்வுகளை  மேற்கொள்கின்றனர். மைக்ரோ கிராவிட்டியில் தங்கி பல்வேறு சோதனைகளைச் செய்கிறார்கள்.

கடந்த 1998ம் ஆண்டு முதல் இந்த சர்வதேச விண்வெளி மையம்  செயல்பட்டு வருகிறது. நாசாவின் கூற்றுப்படி, இதுவரை 19 நாடுகளில் இருந்து  243 பேர் இந்த விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்துள்ளனர். இதுவரை,  எத்தனையோ பிரச்னைகள் நாடுகளுக்குள் வந்தாலும் கூட சர்வதேச விண்வெளி  நிலையத்தில் எந்தவொரு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால்  ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக,  தற்போது விண்வெளி நிலையம் குறித்த பல அச்சங்கள் எழுப்பப்படுகின்றன.

அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், விண்வெளி  நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள்கள் போன்றவை, பூமியின் வளிமண்டலத்தில் எங்கு  வேண்டுமானாலும் விழலாம். நாசாவின் கூற்றுப்படி, சர்வதேச விண்வெளி நிலையம்  சாதாரணமாக செயல்படுகிறது. உக்ரைன் படையெடுப்பால் எவ்வித பாதிப்பு  ஏற்படவில்லை என்று கூறினர். ஆனால், ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் பிற சர்வதேச நட்பு நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ரஷ்யா மீதான தடையை நீக்காவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆபத்து ஏற்படும்.

ரஷ்யா மீது மேலும் தடைகள் விதிக்கப்பட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் சேதமடைய வாய்ப்புள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் தடைகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறு நடந்தால் எந்தெந்தப் பகுதிகளில் விண்வெளி நிலையத்தின் குப்பைகள் விழும். அவ்வாறு விழும் குப்பைகள் ரஷ்யாவின் பக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. விண்வெளி நிலையத்தில் தற்போது நான்கு நாசா விண்வெளி வீரர்கள் உள்ளனர்’ என்று கூறியுள்ளார். இவ்வாறாக பூமியில் போடும் சண்டை சர்வதேச விண்வெளி நிலையத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் மற்ற நாடுகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளன.

Related Stories: