நாமக்கல்: குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளர்கள் கொடுத்த கொலுசுகளை விற்று காசாக்க நகைக்கடைக்கு சென்ற பெண்களிடம், இது போலி கொலுசு எடுத்துட்டு போ, இல்லை போலீசை கூப்பிடுவேன் என கடை உரிமையாளர் திட்டியதால் அதிர்ச்சியடைந்த பெண்கள், அதிமுக மீது செம கடுப்பில் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 188 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி நாளான நேற்று தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அதிமுக வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர 33 வார்டுகளிலும் திடீரென கொலுசு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். பள..பள வென மின்னிய கொலுசை, புதுமெருகு கலையும் முன்பாக விற்று ₹3 ஆயிரம் முதல் ₹4 ஆயிரம் வரை காசாக்கிவிட வேண்டும் என்று, 11வது வார்டை சேர்ந்த பெண்கள் இருவர், கடைவீதியில் உள்ள நகை கடைக்கு சென்றனர்.