திருச்சி: திருச்சியில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக சுயேச்சை வேட்பாளர் கடையில் பதுக்கி வைத்திருந்த 136 மூட்டை அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று (17ம்தேதி) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 47வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் முகமது ஜியாவுதீனுக்கு சொந்தமான கடையில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது.