இன்ஸ்டாகிராம் மூலம் காதலிக்கும் பெண்களே உஷார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் வக்கீல் பலாத்காரம்: திருமணம் செய்ய 100 சவரன் கேட்ட வாலிபர் கைது; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

சென்னை: இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரிடம் வாழ்க்கையை இழந்து கர்ப்பமான இளம்பெண் கொடுத்துள்ள புகாரில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் சென்னையில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். இவர் கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது நடன பள்ளியில், 2019ம் ஆண்டு எனது தம்பி சேர்ந்தார். இதனால் பிரபுவுக்கும் எனக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. கடந்த 2019 டிசம்பர் மாதம் பிரபுவின் வளர்ப்பு நாய்க்கு உடல்நிலை சரியில்லை என கூறி என்னை அவரது சொகுசு காரில் மாதர்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கு வைத்து இருவரும் நொறுக்குத் தீனி சாப்பிட்டோம்.

இதன்பின்னர் பிரபு, தான் வைத்திருந்த குளிர்பானத்தை கொடுத்தார். அவற்றை வாங்கி குடித்த நான் மயக்கம் அடைந்தேன். மறுநாள் மயக்கம் தெளிந்து பார்த்தபோது எனது ஆடைகள் அலங்கோலமாக கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். பிரபுவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும் கதறி அழுதேன். இதுகுறித்து பிரபுவிடம் கேட்டபோது உன்னை நான் திருமணம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதன்பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துவந்தோம்.இந்த விஷயம் பிரபுவின் தாய் ரேவதிக்கு தெரியவந்தது. திருமணம் செய்யவேண்டும் என்றால் நகை, பணம் வாங்கி வா என்று என்னிடம் கூறினார்.

அத்துடன் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டினார். திருமணம் செய்துகொள்ளும்படி நான் கட்டாயப்படுத்தியதால் பிரபுவும் அவரது தாய் ரேவதியும் கடந்த 2019ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு ஒரு லட்சம் செலவாகும் என்று கூறினர். இதனால் அவர்களுக்கு கூகுள்பே மூலம் உடனடியாக ரூ.80 ஆயிரம் அனுப்பினேன். இதன்பிறகு திருமணம் செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தபோது வழக்கறிஞர்கள் யாரும் வரவில்லை என்று கூறி, எதிரே உள்ள கோயிலுக்கு அழைத்துச்சென்று தாலி கட்டாமல் மாலை மட்டும் மாற்றிக்கொண்டு வீட்டுக்கு அழைத்துவந்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நான் கர்ப்பம் அடைந்தேன். இதுகுறித்து பிரபுவிடம் தெரிவித்தபோது 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் தர வேண்டும். அப்போதுதான் உன்னை முறைப்படி திருமணம் செய்வேன் என்று கூறியதுடன் ஏற்கனவே அவருடன் ஜாலியாக இருந்த வீடியோவை காண்பித்து மிரட்டினார். எனவே, என்னை ஏமாற்றிய பிரபு, அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி, பிரபுவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு உடந்தையாக செயல்பட்ட தாய் ரேவதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: