திருமணத்திற்கு சென்று திரும்பிய போது டூவீலர் மீது லாரி மோதி தம்பதி உடல் நசுங்கி பலி-தர்மபுரி அருகே சோகம்

தர்மபுரி : தர்மபுரி அருகே டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில், திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த தம்பதி, பரிதாபமாக உயிரிழந்தனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கூன்மாரிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (55). இவர், நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமன அள்ளியில் சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வந்தார். இவரது மனைவி வள்ளியம்மாள் (46). இந்த தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில், ஒரு மகளுக்கு திருமணம் ஆகியுள்ளது. நேற்று காலை, தர்மபுரியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தம்பதிகள் இருவரும் டூவீலரில் சென்றனர். பின்னர், காலை 10.30 மணியளவில், தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரி பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

மதிகோன்பாளையம் சந்திப்பு சாலை அருகே வந்த போது, பின்னால் தார் கலவை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, திடீரென இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட புஷ்பராஜ் மற்றும் வள்ளியம்மாள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறியதில், உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நிகழ்ந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தர்மபுரி டவுன் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர்,  இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்து நடந்த இடம் தேசிய சாலை என்பதால், அவ்வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Related Stories: