மும்பை: பிரபல நடிகரும், அர்ஜுனா விருது வென்ற விளையாட்டு வீரருமான பிரவீன் குமார் சோப்தி காலமானார். அவருக்கு வயது 74. பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் சீரியலில் பீமனாக நடித்த பிரவீன் குமார் சோப்தி சர்வதேச அளவில் புகழ் அடைந்தார். அந்த தொடருக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பாடிகார்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ‘‘பீம் பாய்... பீம் பாய்... அந்த லாக்கரில் இருக்கும் பணத்தை எடுத்து அவினாசி நாய் மூஞ்சியில விட்டெறி’’ என்ற வசனம் மிகவும் பிரபலமானது. கமல்ஹாசன் சொன்னவுடன் மாடி ஜன்னலில் இருந்து கீழே குதிக்கும் உண்மையான பாடிகார்டாகவும் நடித்திருப்பார் பிரவீன் குமார் சோப்தி.