புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம்- கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அம்மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உடன் இன்று காலை முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணைகட்ட எப்போது அனுமதி வழங்கப்படும் என மக்களவையில் கர்நாடகா எம்.பி. ஒருவர் நேற்று கேள்வி எழுப்பினார்.