நீர்நிலை, நீர்வழி பாதையை பதிவு செய்வோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை; சொத்தை வாங்குவோர், விற்போரிடம் உறுதிமொழி வாங்க வேண்டும்; பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: நீர்நிலை, நீர்வழி பாதையை பதிவு செய்வோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க பதிவுத் துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவணப் பதிவின்போது, சொத்து உரிமையாளரால் எழுதிக் கொடுக்கப்படும் ஆவணத்தில் கட்டுப்பட்ட சொத்து, நீதிமன்றத்தால் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நீர்நிலையில் அமையப் பெறவில்லை என உறுதியளிக்கிறேன் என உறுதி மொழி பெறப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசையாச் சொத்துக்கள் குறித்த அனைத்து ஆவணங்களுக்கும் இந்த உறுதிமொழியினை ஆவணத்தின் பகுதியாக சேர்க்கப்ப்பட வேண்டும் எனவும் ஆவணத்துடன் ஒளிவருடல் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பாணையில் தெரிவிக்கப்பட்டவாறு தவறாது செயல்படுமாறு அனைத்து பதிவு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் மீது எவ்வித ஆவணப் பதிவும் மேற்கொள்ளப்படக் கூடாது என பிறிதொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையின் அடிப்படையில் அனைத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையின்படி நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டது தவறாது கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் கணினிமயமாக்கப்படாத நத்தம் நிலங்களை பொறுத்து அவற்றில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகளின் விவரங்களை வருவாய் துறையினைரை தொடர்பு கொண்டு சொத்துக்கள் பட்டியல் பெற்றுக் கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வழிகாட்டி பதிவேட்டில் மேற்கண்ட நிலங்களுக்கு ‘0 ‘ மதிப்பு உட்புகுத்தவும் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சொத்தானது நீர்நிலை பகுதியில் அமையப் பெறவில்லை என்பதற்கான சான்று/உறுதிமொழி {நீதிபேராணை எண் 22163/2018ல் வழங்கப்பட்ட தீர்ப்புரையை காண்க) பெற வேண்டும். அதில், இந்த ஆவணத்தில் கண்ட சொத்தானது நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டுப்படவில்லை என சான்றளிக்கிறோம். மேலும் இதனில் தங்களுக்கு தவறான தகவல் அல்லது சான்று அளிக்கப்பட்டதாக பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனால் நான் நாங்கள் சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவோம் என்பதையும் அறிவேன்/அறிவோம். ஆவணத்தை எழுதிப் பெறுபவர்களின், ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: