லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வை வீழ்த்த, தனது தலைமையிலான கூட்டணியில் இணையும்படி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும், ஆர்எல்டி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும், ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் லக்னோவில் நேற்று அளித்த பேட்டியின்போது, ‘மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால் சமாஜ்வாடி-ஆர்எல்டி கூட்டணி வெற்றி பாதிக்குமா?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அகிலேஷ் அளித்த பதிலில், ‘‘அம்பேத்கர் கொள்கையை பின்பற்றுகிறவர்களும், சமாஜ்வாடியினரும் ஒன்றுதான். அவர்கள் கூட்டணி சேர வேண்டும் என ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி உள்ளேன். நாட்டின் அரசியல் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற அம்பேத்கர் ஆதரவாளர்களும், சமாஜ்வாடியினரும் உடனே இணைவது அவசியம்,’’ என்றார்.