ராஜபாளையம் அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானை அட்டகாசம்-விவசாயிகள் பீதி

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சேத்தூர் நட்சாடைப்பேரி ஒத்தைப்பனை காட்டுப்பகுதியில் வலம் வரும் ஒற்றை காட்டுயானை விவசாய நிலத்தில் புகுந்து மா, தென்னை, தேக்கு மரங்களை சேதபடுத்தியது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.ராஜபாளையம் அருகே சேத்தூர் நட்சாடைப்பேரி ஒத்தைப்பனை காட்டுப்பகுதியில் லட்சுமணசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த ஒற்றை காட்டுயானை இரவு நேரத்தில் லட்சுமணசாமியின் தென்னந்தோப்பிற்குள் புகுந்து இருபதிற்கும் மேற்பட்ட தென்னை, மா, தேக்கு மரங்களை ஒடித்து சேதப்படுத்தியது. மேலும் பத்து வருடங்களுக்கு மேலாக வளர்க்கப்பட்ட தென்னை மரங்களை வேரோடு யானை பிடுங்கி வீசியதால் பெரும் இழப்பை சந்தித்தாக லட்சுமணசாமி கூறினார்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒற்றை காட்டுயானை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் விரைந்து வந்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும் தென்னைக்கு காப்பீடு செய்தும் வேளான்மை துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு காப்பீடு நிதி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீட்டு காட்டுயானையை விரட்ட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: