நில அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் வாக்கி டாக்கி டவரில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்: மதுரவாயல் அருகே பரபரப்பு

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே நில அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் வாக்கி டாக்கி டவரில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (41). கார் டிரைவர். இவருக்கு திருவள்ளூர் அருகே அரண்வாயல் பகுதியில் பூர்வீக சொத்து உள்ளது. அந்த நிலத்தை இவரது உறவினர்கள் ஏமாற்றி போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை மீட்டு தர கோரி போலீஸ் நிலையங்களில் பல முறை நாகராஜ் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நாகராஜ் இன்று அதிகாலை மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் உள்ள வாக்கி டாக்கி டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்தில் குவிந்தனர். நாகராஜை கீழே இறங்கும்படி கூறினர். வர மறுத்தார்.

தகவலறிந்து மதுரவாயல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நாகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது மனைவி மற்றும் குழந்தைகளை வரவழைத்து போலீசார் பேச வைத்தனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு நாகராஜ் கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, சொத்து சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் உறுதியளித்தனர். அதே நேரத்தில் அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து, அவரது மனைவி, மகளுடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories: