அவிநாசி அருகே சிறுத்தை தாக்கி 4 பேர் படுகாயம்; டிரோன் மூலம் கண்காணிப்பு: கூண்டு வைக்கப்பட்டது

அவிநாசி: அவிநாசி அருகே சிறுத்தை தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்துள்ளது பாப்பன்குளம் ஊராட்சி. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாறன் (60), வரதராஜ் (62) விவசாய கூலித்தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் நேற்று காலை வேலைக்கு புறப்பட்டனர்.  பாப்பன்குளம் டவர் ஹவுஸ் அருகே சென்றபோது, புதர் மறைவில் பதுங்கியிருந்த  சிறுத்தை திடீரென இருவரையும் ஆவேசமாக தாக்கியது. இதில், 2 பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், டவர் ஹவுஸ் பகுதிக்கு திரண்டனர். அப்போது, மோகன் (58), முன்னாள் சேவூர் திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் (55) ஆகிய 2 பேரையும்  சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியது. இதில், அவர்களும் காயம் அடைந்தனர். அவர்களையும் பொதுமக்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 2 பேரையும் சேர்த்து 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தற்போது அவிநாசி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் ட்ரோன் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியிலும் இறங்கி உள்ளனர்.

Related Stories: