சென்னை: தமிழக பொதுப்பணித்துறை நிர்வாக வசதிக்காக நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால், பொதுப்பணி்த்துறையில் 1,077ம், நீர்வளத்துறையில் 2287 பொறியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணை: நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய இரண்டு தனித் துறைகளாக செயல்படுவதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறையில் முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) மற்றும் தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்), சென்னை மண்டலம், பொதுப்பணித் துறை, சேப்பாக்கம் அலுவலகத்தில் தனிப்பொதுப் பிரிவு அமைப்பதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையின் அனைத்து விவகாரங்களையும் சென்னையில் உள்ள முதன்மை தலைமை பொறியாளர் கவனிப்பார். இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறைக்கான தலைமை பொறியாளர் பணியிடங்கள் 19ல் இருந்து 20 ஆக மாற்றியமைக்கப்படுகிறது. அதே போன்று கண்காணிப்புப் பொறியாளர் பதவியில், விகித மாற்றத்தின்படி அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் பலம் என்பது பொதுப்பணித் துறையைப் பொறுத்தமட்டில், புதிதாக ஒன்றைச் சேர்ப்பதன் மூலம் 16க்கு பதிலாக 17 ஆக மாற்றியமைக்கப்படும்.