திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் மயானத்தில் குப்பை கொட்டும் நகராட்சி பணியாளர்கள்

* சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கும் அவலம்

* நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள மயானத்தில் நகராட்சி அதிகாரிகளே குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாடு இல்லாததே காரணம் என்றும், அதனால் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க ேவண்டும் எனவும் பொதுமக்கள் ெதரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் நகராட்சி பழமை வாய்ந்த நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் சுமார் 36 வார்டுகள் உள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கால்வாய், மின்விளக்கு உள்ளிட்டவை நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளொன்றுக்கு இரண்டு டன் குப்பைகள் அல்லப்படுகிறது. இவை அனைத்தும் திருப்பத்தூர் ப.ஊ.ச நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது, ₹10 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை- மக்காத குப்பைகளை என தரம் பிரித்து அதில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மக்காத குப்பைகள் அனைத்தையும் சிமெண்ட் கம்பெனிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது நகராட்சி அதிகாரிகள் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த படாமல் இருந்துவரும் காரணத்தினால், பணிகள் அனைத்தும் முடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் குப்பை கிடங்கு முழுவதும் மலைபோல் குப்பைகள் தேங்கி இருப்பதால் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், ஊழியர்கள் அருகிலுள்ள கிருஷ்ணகிரி மெயின் ரோடு சுடுகாட்டில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.

மயானத்தில் பிணங்களை புதைக்க கூட முடியாமல் குப்பைகள் நிறைந்த மயானமாக இருந்து வருகிறது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள குப்பைகள் துர்நாற்றம் வீசி அருகே உள்ள அட்வகேட் ராமநாதன் நகர், பெரியார் நகர், கிருஷ்ணகிரி மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் குப்பைகளை அதிகாரிகளே தீவைத்து கொளுத்துவதால் புகைமூட்டம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகின்றனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் பணி என்ன ஆனது என்று குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: