துபாய்: தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகமும், ஹவுதிக்கு ஆதரவாக ஈரானும் செயல்படுகின்றன. இந்நிலையில், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள புதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் நடத்திய டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தின. இதில், முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.