புது டெல்லி : இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் லக்ஷியா சென் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் லோ கீன் யீவுடன் (சிங்கப்பூர்) நேற்று மோதிய லக்ஷியா (20 வயது) அதிரடியாக விளையாடி 24-22, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 54 நிமிடங்களுக்கு நீடித்தது. சூப்பர் 500 அந்தஸ்து பேட்மின்டன் தொடரில் லக்ஷியா முதல் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் லக்ஷியா வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.