ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய ஓபன் கனவு தகர்ந்தது: ஆஸ்திரேலிய அரசு விசா ரத்து செய்ததை எதிர்த்து ஜோகோவிச் தொடர்ந்த மனு தள்ளுபடி

கான்பெரா: ஆஸ்திரேலிய அரசு விசாவை ரத்து செய்ததை எதிர்த்து டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் ரூ.405 கோடி பரிசுத்தொகை கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை அதிகாலை 5.30க்கு தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இத்தொடரில் 9 முறை கோப்பை வென்ற, உலகின் நம்பர்-1 வீரர், செர்பியாவின் ஜோகோவிச், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்றார். ஆனால் அவர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஜோகோவிச் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார்.

ஆனால், ஆஸ்திரேலிய குடியுரிமை மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை நேற்று முன்தினம் மீண்டும் ரத்து செய்தார். இதனால் அவர் மறுபடியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜோகோவிச் மனுவை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய ஓபன் கனவு தகர்ந்தது.

Related Stories: