சிம்டெகா: ஜார்கண்ட் மாநிலத்தின் சிம்டெகா மாவட்டத்தை சேர்ந்தவர் கார்யா தேவி(60). இவர் குட்பானி தீபாடோலி கிராமத்தில் உள்ள உறவினரின் இறுதிசடங்கில் பங்கேற்க அங்கு சென்றார். அப்போது, அங்கு வந்திருந்த கிராம மக்களில் சிலர் அவரை தாக்கியதுடன் திடீரென அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் தேவி தீப்பிடித்து எரியத் தொடங்கினார். தங்களுடைய நலன்களுக்கு எதிராக தேவி பேய் ஏவியதால் தீ வைத்து எரித்ததாக கிராமத்தினர் தெரிவித்தனர். இதை கண்ட பொதுமக்களில் சிலர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் தீயில் கருகி பலத்த காயத்துடன் இருந்த தேவியை மீட்டு சதார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.