அதியமான்கோட்டை அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து 40 மூட்டை குட்கா கடத்திய கும்பல்

நல்லம்பள்ளி: அதியமான்கோட்டை அருகே கேட்பாரற்று சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரியை போலீசார் சோதனை செய்த போது, அதில் ரகசிய அறை அமைத்து, 40 மூட்டைகளில் குட்கா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன் உத்தரவின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் நேற்று இரவு புறவடை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் கன்டெய்னர் லாரி நீண்ட நேரமாக நின்றிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், கன்டெய்னர் லாரியை சோதனை செய்தபோது, அதில் டிரைவர் இல்லை.

லாரியை திறந்து பார்த்தபோது, காலியாக இருந்தது. அதன் நீளத்திற்கு ஏற்ப உள்பக்கம் அளவு குறைவாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், லாரியின் உள்ளே சென்று உடைத்து பார்த்தபோது, அதில் ரகசிய அறை அமைத்து 40 மூட்டைகளில் ₹4லட்சம் மதிப்புள்ள, குட்கா போதை பொருளை மறைத்து கடத்திச் சென்றது தெரிந்தது. கன்டெய்னர் லாரி மற்றும் குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: