பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவராக உள்ள கே.சிவனின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து இஸ்ரோவின் புதிய தலைவராக கே.சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கமிட்டி இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.விண்வெளித்துறையின் செயலாளர் மற்றும் இஸ்ரோவின் தலைவராக 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை அவர் வகிப்பார் என ஒன்றிய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த சோம்நாத் கொல்லத்தில் உள்ள டிகேஎம் இன்ஜினியரிங் கல்லுாரியில் பொறியியல் படிப்பு படித்த பின்,பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் ஏரோஸ்பேஸ் பட்ட மேற்படிப்பு முடித்தார். கடந்த 1985ம் ஆண்டு திருவனந்தபுரம்,வலியமலாவில் உள்ள விக்ரம்சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(விஎஸ்எஸ்சி) சேர்ந்த அவர் படிப்படியாக உயர்ந்து அதன் இயக்குனரானார். இஸ்ரோவின் தலைவராகும் கேரளாவை சேர்ந்த 4வது நபர் சோம்நாத் ஆவார். ஏற்கனவே இப்பதவியை வகித்துள்ள கஸ்துாரிரங்கன்,மாதவன் நாயர், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.