வேதாரண்யம் தகட்டூரில் மண்சாலையை தார்சாலையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

வேதாரண்யம் : வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் மண்சாலையை தார்சாலையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேதாரண்யம் தாலுகா தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் வந்து செல்ல ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள மண் சாலையை பயன்படுத்திதான், அரசு உயர் நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், வாய்மேடு மற்றும் தகட்டூர் கடைத்தெரு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மழைக்காலங்களில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகுந்த அவதிப்படுகின்றனர்.

மேலும் கொசு உற்பத்தியாகி டெங்கு முதலிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், நேரில் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என்று அரசுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: