தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்கம்: கலெக்டர் அறிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பொருள் தேர்வு தொகுதி 4 (உத்தேச பணி காலியிடங்கள் 5, 255) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அரசு பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் பணி நியமனம் செய்வதற்கு ஏதுவாக போட்டி தேர்வுக்கான அனைத்து பாடகுறிப்புகளும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் tamilnaducareerservices .tn.gov.in என்ற  கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 3ம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்த  பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டி தேர்வர்கள், நேரடியாக அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-27660250 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: