கொழும்பு: பெருமளவு நிதிச்சிக்கல்களால் இலங்கை அரசு ஏற்கனவே விழி பிதுங்கியிருக்கும் நிலையில், பணவீக்கம் வரலாற்று உச்சத்தை எட்டியிருப்பதால் அந்நாடு திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கத்தால் இலங்கையில் உணவு பொருட்களின் விலை இறக்கை கட்டி பறக்கிறது. இலங்கையின் பணவீக்கம் 11.1 சதவீதத்தில் இருந்து டிசம்பர் மாதம் 12.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல உணவு பணவீக்கம் 17.5 சதவீதத்தில் இருந்து 22.1 சதவீதமாக அதிகரித்துவிட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து மீளமுடியாமலும், அதற்கான செலவுகளை எதிர்கொள்ள முடியாத நிலையிலும் இலங்கை அரசு கஜானா காலியாக உள்ளது. பல்வேறு நாடுகளில் வாங்கியுள்ள கடன்களையும் இலங்கை அரசால் செலுத்த முடியவில்லை.