ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமைதிப் போராட்டத்தை தடுக்க, குப்கார் கூட்டணியை சேர்ந்த 3 முன்னாள் முதல்வர்கள் உள்பட பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை 2019ல் ரத்து செய்த ஒன்றிய அரசு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து, அங்கு தொகுதிகளை மறுவரையறை செய்ய முடிவு செய்த தேர்தல் ஆணையம் அதற்கான மறுவரையறை குழுவை நியமித்தது. இதன் கூட்டம் கடந்த மாதம் 20ம் தேதி டெல்லியில் நடந்தது. இதில், கூடுதலாக ஜம்முவுக்கு 6, காஷ்மீருக்கு ஒரு தொகுதி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குப்கார் கூட்டணி ஜனவரி 1ம் தேதி அமைதிப் போராட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தது.