மறைந்த பழம்பெரும் நடிகை ருக்மணிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயல்வதாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக புகார்: தமிழக அரசு சொத்தாட்சியர் தகவல்

சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் முதல் ஆக்‌ஷன் கதாநாயகியுமான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து தமிழக அரசின் சொத்தாட்சியர் கடந்த 1996ம் ஆண்டு உத்தரவிட்டார். இது தொடர்பாக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சொத்தாட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணி அம்மாளுக்கு சொந்தமாக தியாகராய நகர் பத்மநாபன் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது, அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார்.

 அந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிர்வாகி சென்றபோது, அதை சட்டவிரோதமாக 10 பேர் ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விசாரணையில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு, கட்டிடத்தை அபகரிக்கும் நோக்குடன் நடிகர் மன்சூர் அலிகான் செயல்பட்டு வருவதாகவும் இடைக்கால நிர்வாகி கண்டறிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த கட்டிடத்தில் ஒரு பகுதியை இடித்துவிட்டு மாற்றங்கள் செய்வதற்கும் மன்சூர் அலிகான் முயற்சிப்பதையும் கண்டறிந்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது. சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது. இது தொடர்பாக மன்சூர் அலிகானுக்கு எதிராக தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: