சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆந்திரா மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து வந்த நீராலும் மற்றும் பூண்டியை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பியதாலும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்திற்கு கடந்த அக்டோபர் முதல் நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நேற்று பூண்டி நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு 764 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியது. இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 83 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடிக்கும் தண்ணீர் நிரம்பியதால் கடல் போல் காட்சியளித்தது.