சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜை நிறைவு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தங்க அங்கி, நேற்று முன்தினம் மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. நண்பகல் 12.15 மணியளவில் மண்டல பூஜை நடைபெற்றது.

மாலை 4 மணியளவில் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு  பூஜைகள் நடந்தன. இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. இதனால், 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடைந்தது. வரும் 29ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடப்படும் நடை, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மண்டல பூஜையை தரசிக்க, சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனமும், மகர விளக்கு பூஜையும் நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் 30ம் தேதி முதல் பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: