இறக்குமதி விலை உயர்வதால் நடவடிக்கை பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க சலுகை: மானிய கொள்கையில் மாற்றம்

புதுடெல்லி: பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க, மானியக் கொள்கையில் ஒன்றிய அரசு மாற்றம் செய்கிறது. மண் வளத்தை பாதுகாக்கும் பாஸ்பேட், பொட்டாஷ் வகை உரங்களின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய ஒன்றிய அரசு அவற்றை இறக்குமதி செய்கிறது. உலகளவில் இவற்றின் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் டிஏபி உரம் கடந்த மே மாதம் ஒரு டன் ரூ.42,375 ஆக இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில் ரூ.54,570 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை மேலும் உயர்ந்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா  தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களின் உள்நாட்டு உற்பத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தற்போதைய மானிய கொள்கையில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த உரங்களின் உற்பத்தியில் தற்சார்பை எட்ட முடியும் என ஒன்றிய அரசு கருதுகிறது. தற்போது, ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: