ஆதிதிராவிடர் நலத்துறை சார்பான 23 அறிவிப்புகளில் 17 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியீடு: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

நெல்லை: சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக வெளியிடப்பட்ட 23 அறிவிப்புகளில் 17 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற பேரவைத்தலைவர் அப்பாவு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில், பழங்குடியினர் மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்தும் வகையில் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு காரையார் பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் இணைய சேவை வசதியை பேரவைத்தலைவர் அப்பாவு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து மாணவர்களுடன் உரையாடினர். பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 12 நபர்களுக்கு காணிக்காரன் சாதிச்சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும், 265 பயனாளிகளுக்கு ரூ.85.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 200 தூய்மை பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டைகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.  

கூட்டத்தில் பேரவைத்தலைவர் மு.அப்பாவு பேசினார்.  ெதாடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: 1,138 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், 120 பழங்குடியினர் நல பள்ளிகளும், 8 தனிப்பள்ளிகளும், இவைகளுக்கெல்லாம் விடுதிகள் வசதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துறை சார்பாக 23 அறிவிப்புகள் வெளியிட்டு அதில் 17 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விஜிலன்ஸ் கமிட்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலம் மக்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.

Related Stories: