இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையால் 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் 570 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே கடந்த 18ம்தேதி இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் 43 தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் 6 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்குள் மீண்டும் 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திள்ளது. இந்த விஷயத்தில் தங்களின் தலையீட்டை நான் கோருவதுடன், கைது செய்யப்பட்ட 55 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்வதை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறேன். மேலும் அவர்கள் பறிமுதல் செய்த படகுகளையும் மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: