கொடைக்கானல்: கொடைக்கானலில் பள்ளி வளாகத்தில் காட்டெருமைகள் புகுந்ததால், மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிகமாக உலா வருகின்றன. இவை நகரில் வலம் வரும்போது, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று பிற்பகல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் 4 காட்டெருமைகள் புகுந்தன. இதனால், மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்து, நகரில் கலையரங்கம் பகுதியில் உள்ள கடைவீதி வழியாக காட்டெருமைகள் சென்றன. அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களை விரட்டின. இதனால், அவர்கள் அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைந்தனர்.