ஓசியில் பெட்ரோல் போட மறுத்ததால் பங்க்கை கொளுத்துவதாக மிரட்டிய ரவுடிகள் கைது

புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் வீதியை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் விருதகிரி (20). லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் விற்பனையாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவு விருதகிரி  பணியில் இருந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ரூ.100க்கு பெட்ரோல் போடுமாறு கூறினர். பணத்தை கேட்டபோது, தரமறுத்து மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பெட்ரோல்  போடாவிட்டால் பங்க்கை கொளுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் விருதகிரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, காமராஜர் மணிமண்டபம் அருகே மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சின்ன முதலியார்சாவடியை சேர்ந்த விஜயசாரதி, வேலியப்பன் என்பதும், அவர்கள் இருவரும் பெட்ரோல் பங்கில் ஊழியரை மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து ரவுடிகளான இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: