நாடாளுமன்ற துளிகள்

* இணைய குற்றங்களை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் தேவை

இணைய குற்றங்களை தடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்று பதிலளித்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்கள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பை சரிப்பார்ப்பதற்காக ஓடிடி தளங்களுக்கு கடுமையான விதிமுறைகளை கொண்டு வருவது குறித்து விவாதங்கள் மற்றும் ஒருமித்த கருத்து தேவை. சைபர் குற்றங்கள் குழந்தைகளை பாதிக்கும் வழிகளை பார்க்கும்போது மேலும் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறையை உருவாக்குவதற்கு அனைவரின் ஒரே மாதிரியான கருத்து அவசியமாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்போதெல்லாம் இணைய சட்டங்களை சிறிது சிறிதாக இறுக்கி அதனை செயல்படுத்த முயற்சிக்கிறோமா அப்போதெல்லாம் நமது உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயகம் தடுக்கப்படுவதாகவும், சுதந்திரத்திற்கான உரிமை பறிக்கப்படுவதாகவும் முழக்கமிடத்தொடங்குகிறோம். இணைய குற்றங்களை தடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் அவசியமாகும்’ என்றார்.

* அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்

நாட்டின் முக்கிய அணைகளை பாதுகாப்பது தொடர்பாக ஒன்றிய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை சில திருத்தங்களுடன் கடந்த 2ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இதன்படி அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட நிர்வாகத்திற்காக தேசிய அளவில் அணைகள் பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்படும். இது மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாக கூறி திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக எம்பிக்களின் கடும் எதிர்ப்பை மீறி இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பின் சட்டமாக நிறைவேற்றப்படும். இதே போல, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சம்பளம் மற்றும் சேவை திருத்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில்நேற்று நிறைவேற்றப்பட்டது.

* காஷ்மீரில் சட்டம் 370 நீக்கிய பிறகு பொதுமக்கள் 96 பேர் பலி

மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘கடந்த 2019, ஆகஸ்ட் 5ம் தேதி சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, எந்த காஷ்மீரி பண்டிட்/இந்துக்கள் காஷ்மீரில் இருந்து இடம்பெயரவில்லை. சமீபத்தில் சில காஷ்மீரி பண்டிட் குடும்பத்தினர், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் காஷ்மீரில் இருந்து ஜம்முக்கு மாறி உள்ளனர். அவர்களும் அரசு ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். குளிர்காலத்தில் ஆட்சி நிர்வாகம் ஜம்முவுக்கு மாறுவதால் அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு கடந்த நவம்பர் வரை காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்களால் 96 பொதுமக்களும், 81 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். 366 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Related Stories: