தனியார் மருத்துவமனைகளில் பிரசவ சிகிச்சை கட்டண விபர பலகை வைக்க வழக்கு

மதுரை: தனியார் மருத்துவமனைகளில் பிரசவ சிகிச்சை கட்டண விபர பலகை வைக்கக் கோரிய மனு திரும்ப பெறுவதற்காக தள்ளி வைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை முறையில் பிரசவங்கள் நடக்கின்றன. இதற்காக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின்னரும் 3 முதல் 5 நாட்கள் வரையில் மருத்துவமனையிலேயே தங்க வேண்டியுள்ளது. இதற்காக அறை கட்டணம், பரிசோதனை செலவுகள் என தனித்தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பிரசவ சிகிச்சை கட்டண விபரம் குறித்த தகவல் பலகையை வைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர், ஒவ்வொருவரின் உடல் நல பிரச்னை மற்றும் தேவைப்படும் சிகிச்சையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும் எனக்கூறி, மனுவை திரும்ப பெறுவதற்காக டிச.6க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: