மதுரை: மதுரை வைகை ஆற்று வெள்ளத்தில் தாயுடன் சிக்கித் தவித்த நாய்க்குட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே கடந்த சில நாட்களாக மதுரை வைகையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று காலை மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வைகை ஆற்று பாலத்தின் அருகே இருந்த மணல் திட்டில் ஒரு நாய், தனது குட்டியுடன் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்தது. தான் மட்டும் தப்பி வந்து விடலாம் என்றபோதும், குட்டியை பிரிந்து வர மனமின்றி தாய் நாயும், மணல் திட்டிலேயே குரைத்தபடியே பல மணிநேரம் நின்றிருந்தது.