மாணவர்களின் வளர்ச்சிக்கான பணிகளை மேம்படுத்தும் விதமாக மண்டலம் வாரியாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆய்வு கூட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடக்கிறது

வேலூர்: மாணவர்களின் வளர்ச்சிக்கான பணிகளை மேம்படுத்தும் விதமாக மண்டலம் வாரியாக கல்வித்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும் விதமாக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மண்டல வாரியான ஆய்வுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கலந்து கொண்டு ஆய்வு செய்ய உள்ளனர். இக்கூட்டம் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தின் முதல் நாளில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பள்ளி பார்வை மேற்கொள்வர். இரண்டாம் நாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் தொடர்புடைய கள அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடக்கும்.

அதன்படி வரும் 15, 16ம்தேதிகளில் தஞ்சாவூரில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். வரும் 22, 23ம்தேதிகளில் விழுப்புரத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அடுத்த ஆண்டு ஜனவரி 5, 6ம் தேதிகளில் திருநெல்வேலியில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கும், 19, 20ம் தேதிகளில் மதுரையில் நடக்கும் கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கும், பிப்ரவரி 9, 10ம்தேதிகளில் சேலத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், 16, 17ம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கும், 23, 24ம் தேதிகளில் கோவையில் நடக்கும் ஆய்வு கூட்டங்களில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்வி அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பா? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில், இனியும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை. மழை பாதிப்பு குறைந்த பின்பு பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் முடிக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு 3 வருடத்திற்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படும் நடைமுறை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: