வணிக வரித்துறையில் 10 லட்சத்துக்கு மேல் வரி செலுத்துவோரை கண்காணிக்க புதிதாக அழைப்பு மையம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது தமிழகத்தில் தற்போது 10 லட்சத்திற்கும் மேலாக வரி செலுத்துவோர் உள்ளனர். இவர்கள் மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்வதை கண்காணிக்கவும், தாமதமாக அறிக்கை தாக்கல் செய்வதை தவிர்க்கவும் ஏதுவாக வரி செலுத்துவோரை தொடர்ந்து வலியுறுத்த புதிய அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக, 40 பணியாளர்களை கொண்ட அழைப்பு மையம் ஒன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக சென்னையில் நிறுவப்படும். இதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.5.45 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்த ஒப்புதல் வழங்கி ஆணையிடப்படுகிறது. இந்த அழைப்பு மையம் சென்னை வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து செயல்படுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 9 மணி நேரம் செயல்படும். 40 பேர் பணியமர்த்தப்படுகின்றனர். 2 மேலாளர்கள் கண்காணிக்கின்றனர். இந்த அழைப்பு மையம் மூலம் குறைந்தபட்சம் 9 மாதங்கள் அழைப்பு ரெக்கார்டு செய்யப்படுகிறது. வருங்காலத்தில் அழைப்பு அதிகரிக்கும் போது அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அழைப்பு மையத்தில் வரும் அழைப்பிடம் முறைப்படி பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அழைப்பு மையத்திற்கு வரும் தினசரி அழைப்பு, வரி செலுத்துவோரின் பதில் தொடர்பாக செயலாளர், ஆணையர் ஆய்வு செய்வார்கள். தமிழ்நாடு மின்னணு முகமை சார்பிலும் ஒவ்வொரு அழைப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்படும். இதற்காக ரூ.5.16 கோடி ஒதுக்கீடுசெய்து ஆணையிடப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு இந்த அழைப்பு மைய திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: