ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு வசதியான இடம் தர வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜெயலலிதா மரணம் பற்றி விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய மாற்று இடம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது. கடந்து 3 தினங்களாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், ஆறுமுகசாமி ஆணையத்தில் கூடுதல் நீதிபதிகளை சேர்க்க கோரிய அப்போலோவின் கோரிக்கையை நேற்று முன்தினம் நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி பிறப்பித்த உத்தரவில், ‘ஆறுமுகசாமி ஆணையம் 200 சதுர அடி பரப்பளவில் இயங்கி வருவதாக அவர்களின் தரப்பு வாதத்தில் கூறப்பட்டுள்ளது. மிக முக்கிய வழக்கை விசாரிக்கும் ஆணையம், சிறிய இடத்தில்தான் இயங்குவதா? இது, சாதாரணமாக உட்கார்ந்து சாப்பிடும் அறையின் அளவு கூட கிடையாது. அதனால், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மாற்று இடத்தை வரும் 30ம் தேதிக்குள் தமிழக அரசு அளிக்க வேண்டும். மேலும், ஆணையத்திற்கு உதவுவதற்காக மருத்துவக் குழு நீதிமன்றத்தால் அமைக்கப்படும் பட்சத்தில், அதில் எய்ம்ஸ் மருத்துவர்கள் இடம் பெறுவார்கள். ஆணையம் தொடர்பான செய்திகளை சேகரிக்க அனைத்து பத்திரிக்கை நிருபர்களுக்கும் அனுமதி வழங்கலாம். ஒரு விவகாரத்தில் நீதி கிடைப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்ய வேண்டும். ,’ என கூறி. விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: