கோபி: மதுரையைச் சேர்ந்த காந்தியவாதி தம்பதி கருப்பையா-சித்ரா. இவர்கள் அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி குஜராத், பீஹார், ஒடிசா, காஷ்மீர், பஞ்சாப், வாகா என நாட்டின் பல்வேறு பகுதிகளை கடந்த 31 ஆண்டுகளாக மிதிவண்டி மற்றும் நடைபயணம் மேற்கொண்டு வந்தனர். இதுவரை 96 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை நடை பயணமாகவும், மித வண்டி பயணமாகவும் தம்பதியர் கடந்துள்ளனர். இவர்கள் இந்திய சுதந்திர பவள விழாவினையொட்டி கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு சமர்ப்பண யாத்திரை என்ற பெயரில் ஒரு நடைப்பயணத்தினை சென்னிமலையில் தொடங்கி புதுச்சேரி நோக்கி பயணம் மேற்கொண்டனர். செப்டம்பர் மாதம் 11ம் தேதி பாரதியார் நினைவு நாள் அன்று புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடைபயணத்தை நிறைவு செய்யவும் இவர்கள் முடிவு செய்திருந்தனர், இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நாமகிரிப்பேட்டை செல்லும்போது நாய்கள் கடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு சித்ரா படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்துவிட்டன.