வால்பாறை சேடல் அணை எஸ்டேட்டில் அங்கன்வாடி மையத்தை சூறையாடிய யானைகள்

வால்பாறை : வால்பாறை பகுதியில் சமீப காலமான காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. நேற்று சேடல் அணை எஸ்டேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் புகுந்த 6 காட்டு யானைகள், பள்ளியின் வகுப்பறைகளில் உள்ள கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளன. மேலும் அதே வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் கதவு ஜன்னல்களை உடைத்து, உள்ளே புகுந்த யானைகள் 20 கிலோ மாவு கொண்ட 10க்கும் மேற்பட்ட பைகளை எடுத்து வாரி இறைத்து சேதப்படுத்தி உள்ளன.

குழந்தைகளை எடை பார்க்கும் கருவி, பாத்திரங்கள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தி சென்றன. உருளிக்கல் எஸ்டேட்டில் மேரி என்பவர் வீட்டின் சுவற்றை துளையிட்டும், ஜன்னல்களை உடைத்தும், உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து வால்பாறை நகராட்சிக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: