ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அப்பள்ளியின் உயிரியல் பாடப்பிரிவு ஆசிரியரான பெருந்துறை சுள்ளிபாளையம் கூட்டுறவு நகரை சேர்ந்த திருமலைமூர்த்தி (49) என்பவரை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த ஆசிரியர் மீது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவிகள் தலைமை ஆசிரியர் கணேசனிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு வெளியே சொல்லக்கூடாது என தலைமை ஆசிரியர் எச்சரித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பள்ளியின் மாணவ-மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் நேற்று சீனாபுரம் மூன்று ரோடு சந்திப்பில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.