சென்னை: வீர்சக்ரா விருது பெற்ற விமானப்படை அதிகாரி குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீரதீர செயலுக்கான வீர்சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் விங் கமண்டராக இருந்து குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ள அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது.