லண்டன்: டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவர் சீனாவின் பெங்க் சுயாய். இவர் கடந்த நவம்பர் 2 ம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் சீன அரசில் உயர் பதவி வகித்த ஸாங் கேவ்லி தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக ஒரு பதிவை குறிப்பிட்டு இருந்தார்.
அவர் சமூக வலைதளங்களில் இதை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே சீன அரசு இந்த பதிவை நீக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து சீனா அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது இந்த பதிவுக்கு பின் அவரை காணவில்லை என்று தற்போது புகார் எழுந்துள்ளது. அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் யாருக்கும் தெரியவில்லை. மேலும் அவரை யாரும் பார்க்கவோ, அவரைப் பற்றி கேள்விப்படவோ கூட இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச தளத்தில் இருந்த புகார் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.