எம்எல்ஏ, கலெக்டர் உத்தரவின்படி காக்களூர் ஊராட்சி பகுதிகளில் தேங்கிய மழை தண்ணீர் அகற்றம்

திருவள்ளூர்: திமுக எம்எல்ஏ, திருவள்ளூர் கலெக்டர் உத்தரவின்படி, காக்களூர் பகுதியில் தேங்கிநின்ற மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் ஒன்றியம், காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட மபொசி நகர், பூங்கா நகர் மற்றும் காக்களூர் சிப்காட் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி நின்றது. இதனால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. கடும் துர்நாற்றம் வீசியதால் வீட்டில்கூட உட்கார முடியாமல் மக்கள் தவித்தனர். மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேற்கண்ட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மழைநீர், கழிவுநீர் மற்றும் குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஆய்வின்போது திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், எல்லாபுரம் எம்.குமார், ஒன்றிய கவுன்சிலர் டி.கே.பூவண்ணன், வார்டு உறுப்பினர் சுனில், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் அருண் கீதன், சதீஷ் ஆகியோர் சென்றனர்.

Related Stories: