உதைத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் பாமக நிர்வாகி மீது வழக்கு: கைது செய்ய மயிலாடுதுறை போலீஸ் தீவிரம்

மயிலாடுதுறை: தமிழகத்தில் சமீபத்தில் இணையதளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே தயாரிப்பாளர் நடிகர் சூர்யா-ஜோதிகா, இயக்குனர் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங்கிடம், பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி கடந்த 14ம்தேதி மனு அளித்தார். மேலும் நடிகர் சூர்யா எங்கு சென்றாலும் அவரை உதைக்கும் நபருக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கும் என்று பழனிசாமி  அறிவித்தார்.

இது குறித்து மயிலாடுதுறை போலீசார், பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி மீது வகுப்பு விரோதத்தை தூண்டுதல், அரசு ஊழியரால் அதிகார பூர்வமாக பிரகடனம் செய்யப்பட்ட உத்தரவிற்கு கீழ்படியாமல் பணியில் உள்ளவர்களுக்கு தொந்தரவு செய்தல், உயிருக்கு அபாயத்தை விளைவிக்கும் நோய் பரப்பக்கூடிய செயலை அலட்சியமாக செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் நோக்குடன் பொய்யான வதந்திகளை பரப்புதல், கொலைமிரட்டல் விடுத்தல் போன்ற 5 பிரிவுகளின்கீழ் நேற்று வழக்குப்பதிந்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: