பென்னாகரம்: தர்மபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக, பென்னாகரம் அடுத்த தாளப்பள்ளத்தை சேர்ந்த டி.ஆர்.அன்பழகன்(58) உள்ளார். இவர், அதிமுக விவசாய அணியின் மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. மேலும், சாலை ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவரது கிரஷரில் பென்னாகரம் அடுத்த தாசம்பட்டி, ஜெல்மாரம்பட்டியை சேர்ந்த முத்துவேல் (36), சுரேஷ் (32) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இருவரும் தனது கிரஷரில் டீசல் திருடுவதாக குற்றம்சாட்டிய டி.ஆர்.அன்பழகன், நேற்று ஆதரவாளர்கள் சிலருடன் ஜெல்மாரம்பட்டிக்கு சென்றார். அங்கு முத்துவேல், சுரேஷ் ஆகியோரை, டீசல் திருடுகிறீர்களா என கேட்டு மிரட்டியதோடு, இருவரையும் உருட்டுக்கட்டை மற்றும் பைப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், தான் வந்த காரில் அவர்களை தூக்கி சென்று விட்டார்.