பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் நிபுணர் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு: ஒன்றிய அமைச்சர் உறுதி

புதுடெல்லி:  ‘பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைக்கும் நிபுணர் குழுவுக்கு ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்,’ என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள் உட்பட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒட்டு கேட்பு தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளது.

இதற்கு உதவியாக தொழில்நுட்ப நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘சமூக ஊடக தளங்களை பொதுமக்கள் சுதந்திரமாக வெளிப்படுத்தும் வாய்ப்பை சமூக ஊடக ஒழுங்குமுறை விதிகள்   வழங்கினாலும், இந்த தளம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களின் மீது நன்பகத்தன்மை வர வேண்டும். பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும். இந்த குழுவுக்கு தேவையான உள்கட்டமைப்பு, மனிதவளம், ஆய்வக வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படும்,” என்றார்.

Related Stories: