விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 4 கிராமங்கள் தீவு போல காட்சியளிக்கின்றன. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டும் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகப்படியாக மரக்காணத்தில் 6 செ.மீ. மழையும், விழுப்புரத்தில் 4 செ.மீ. மழையும், வானூர் மற்றும் திண்டிவனத்தில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய கோரை ஆற்றின் தற்காலிக தரைப்பாலம் கனமழை காரணமாக உடைப்பு ஏற்பட்டு 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது.