கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழியை பயிற்று மொழியாக்க முடியாது: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு தகவல்

மதுரை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழியை பயிற்று மொழியாக்க முடியாது என ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் இந்தியே பயிற்று மொழியாக உள்ளது. இதுஅநீதியானது. தமிழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில மொழியை கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘‘தமிழ் விருப்ப பாடமாக உள்ளது. விரும்புவோர் அதை தேர்வு செய்து படிக்கலாம். ஒன்றிய அரசின் பணியிலுள்ள ஊழியர்கள்  எங்கு பணி மாறுதல் பெற்றாலும், அவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் செயல்படுவதால், அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க முடியாது’’ என்றார். அப்போது நீதிபதிகள், பல்வேறு வகையான பள்ளிகள் இயங்குகின்றன. அதில், நமக்கு தேவையான பள்ளியை நாம் தேர்வு செய்யலாம். மாறாக, நாம் விரும்பும் கல்வி முறையை, சம்பந்தப்பட்ட பள்ளி தர வேண்டுமென நினைக்கக்கூடாது. ஒன்றிய அரசு பணியாளரின் குழந்தைகள் நலனுக்காக, ஒரே மாதிரியான கல்வியை வழங்குவதற்காகத்தான் இந்த பள்ளிகள் செயல்படுகின்றன எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Stories: